Total Pageviews

Saturday, February 7, 2015

திருக்கோவிலூர்


எனது  குருநாதர்களுள் ஒருவரான நாமக்கல்  மகான் திருக்கோவிலூர்  சென்று பிரார்த்திக்கும் படியாக வழிகாட்டினார்

இந்து தர்மத்தில் சேத்திராடனம் என்பது மிகவும் முக்கியமானது .  ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கமோ ; மகான் ஒருவரின் அருட்பேறுகளும் ; அவர் ஒரு குறிப்பிட்ட தீய குணத்தை எப்படி கடந்தார் என்ற அனுபவப்பதிவுகளும் ; ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு சாபத்திற்கு பரிகாரமோ இருக்கும் அங்கு சென்று வெறுமனே கும்பிட்டாலும் அதில் ஒரு துளி ஆற்றல் நம் ஆத்மாவில் கலக்கும் . அந்த தலத்தை நாம் தேடி சென்ற உழைப்பிற்கு அந்த பரிகாரத்தை பரிசாக இறைவன் அருளுவார் . நடைபயணம் ; பால்குடம் சுமத்தல் ; காவடி எடுத்தல் போன்ற அனைத்துமே சரியை என்ற அளவில் அதனதன் அளவில் பலன் கொடுக்காமல் இல்லை . அந்தந்த நபர்களின் தரத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு பலன் கிடைக்கும்

சைவத்தின் நாயன்மார்களோ ; வைணவத்தின் ஆழ்வார்களோ என்ன செய்து கொண்டிருந்தார்கள் . ஊர் ஊருக்கு சென்று அங்கு அதே சிவனையோ அல்லது நாராயணனையோ தரிசித்தார்கள் . இதை ஏன் இருக்கும் இடத்திலேயே செய்துகொள்ளாமல் ஊர் ஊருக்கு செல்லவேண்டும் . அந்த ஒவ்வொரிடமும் சென்றவுடன் அவர்களுக்கு உள்ளுணர்வாக அரும்பும் விசயங்களை தானும் உணர்ந்து தெளிந்து பிறகு பாடலாக பாடினார்கள் . அப்படி அவை வந்ததால் இன்றளவும் பலர் அதிலிருந்து உணர்வடைந்து கொண்டிருக்கிறோம் . யாருக்கு அது பயன்பட்டதோ இல்லையோ முதலாவது பாடியவர்கள் அவ்விசயத்தில் தெளிவடைந்தார்கள் . அது ஒரு ஞான வளர்ச்சி . நிறை ஞானம் என்ற வார்த்தை இருக்கிறதே அது கொஞ்சம் கொஞ்சமாக பலநாள் பல பிறவி வளரவேண்டியது .ஒரு பிறவியில் நடக்க முடியாதது . பல பிறவிகளாக பல பாவங்களை செய்து மூட்டை மூட்டையாக ஆத்மாவில் வைத்துக்கொண்டு ; ஒரு குருமார்க்கத்தில் வந்தவுடன் ஒரு பிறவியிலேயே உண்ணதம் அடைந்துவிடுவோம் என்று நம்புவது அபத்தம் . இதைப்போல உண்டா என்றுதான் ஒவ்வொருவரும் சொல்வார்கள் . அது அவருக்கே சரியா என்பது அவருக்கே தெரியாது

ஜீவசமாதி ; ஜீவசமாதி என்று சொல்லிக்கொண்டிருந்த வேதாத்திரி மகரிஷி ஜீவசமாதியடையாமலேயே செத்துப்போனார் . கண்ணைத்திறந்தால் போதும் என்று சொன்ன தங்கஜோதி சபை செல்வராஜும் செத்துப்போனார் . அதற்காக அவர்கள் ஒன்றும் அடையாதவர்கள் என்று அர்த்தமல்ல . அவர்கள் நம்மை விட எவ்வளவோ முன்னேறியவர்களே ; ஆனாலும் முழுமை அடைய அவர்களால் இப்பிறவியில் முடியவில்லை . இன்னொரு பிறவியெடுத்து அடையவேண்டியதை அடைந்து இன்னும் பிரகாசிப்பார்கள் .

ஆனால் அவர்கள் செய்த தவறு ; இதுமட்டுமே முழுமையானது என்று சொன்னது ; அதைவிட பெரிய தவறு அவர்களின் சீடர்கள் ஒலிபெருக்கியாக அதுமட்டுமே சரி என ஒளிபரப்புவது .

எந்த ஒரு கொள்கையும் ஒரு தெளிவு என்பதில் ஐயமில்லை ; ஆனால் அதுமட்டுமே முழுமை என்று சொன்னார்களே அதுமட்டுமே தவறு . இதுமட்டுமே முழுமை என்று யார் சொன்னாலும் அது ஒரு அஞ்ஞானம் . அந்த அஞ்ஞானம் ஒரு இருள் . ஒரு அசுர குணம் . அவனே அந்தகாசுரன் . இந்த அந்தகாசுரனையே சிவன் திருக்கோவிலூரில் அழித்தார் . அந்தம் என்றால் முடிவு . இதுமட்டுமே முடிவு இதுமட்டுமே முடிவு என்று மனிதனுக்கு எண்ணத்தை தூண்டுகிறவனே அந்தகாசுரன் . இன்னும் அந்தக்கோவிலில் தெளிவாக எழுதிப்போட்டிருக்கிறார்கள் `` அந்தக ஆணவ அசுரனை அழித்த இடம் `` என்று . இதுதான் அந்தம் – முடிவு முழுமை என்று என்று நம்பிக்கொண்டு சொல்லிக்கொண்டும் ஒலிபெருக்கிகளாக காலம்தள்ளுகிற ஒரு நிலையே அந்தக ஆணவ அசுரன் – அந்தகாசுரன் .



அந்தகாசுர மாயையில் மாட்டிக்கொண்ட ஒலிபெருக்கிகளால் அடுத்தவருக்கு இருள் பரவுவது இருக்கட்டும் ; அந்த நபர்களுக்கே அது பெரிய தடை . நாலைந்து பிறவிகள் முன்னேற்றமில்லாமல் அலைந்து திரிவார்கள் .

சைவம் மட்டுமே சரி என்று வைணவத்தை வெறுப்பவர்கள் அந்தகாசுரன் பிடியில் இருப்பவர்களே .


வைணவம் மட்டுமே சரி என்று சைவத்தை வெறுப்பவர்களும் அந்தகாசுரன் பிடியில் இருப்பவர்களே .


கிறிஸ்தவம் மட்டுமே உசத்தி என இந்துமதத்தை இசுலாத்தை வெறுப்பவர்களும் அந்தகாசுரன் பிடியில் இருப்பவர்களே .


இசுலாத்தை மட்டுமே உசத்தி என இந்துமதத்தை கிறிஸ்தவத்தை வெறுப்பவர்களும் அந்தகாசுரன் பிடியில் இருப்பவர்களே .


இந்துமதம் மட்டுமே உசத்தி என கிறிஸ்தவத்தை இசுலாத்தை வெறுப்பவர்களும் அந்தகாசுரன் பிடியில் இருப்பவர்களே .


எல்லாவற்றிலும் உண்மையுள்ளது ; ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை அழிக்க எத்தனிப்பதை தவிர்ப்பேன் என்பது சரி . எல்லாவற்றிலும் உண்மையுள்ளது அதுபோல எல்லாவற்றிலும் மனிதர்கள் இட்டுக்கட்டிய பொய்யும் உள்ளது என்பதே எதார்த்தம் .


தான் பிறந்த மதத்தை காத்துக்கொள்வதும் ; அதன் தவறுகளை அடுத்த மதத்தின் உண்மைகளை உள்வாங்குவதால் வெளிச்சப்படுத்துவதும் மட்டுமே வளர்ச்சிக்கானது .


யாரால் நமக்கு இடரலோ அவர்களின் உண்மைகளை நாம் உள்வாங்கி செழுமைபட்டால் அவர்களால் நமக்கு ஒன்றும் செய்ய முடியாது அடங்கி விடுவார்கள்


இந்து மதம் கிரிஷ்ணர் காலத்திற்கு பின்பு பிழைப்புவாதிகள் பூசாரிகளால் அக்கிரமங்கள் அதிகரித்தது . இது இயல்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டும் . அப்போது புத்தமதம் வளர்ந்து செழித்தது . ஒன்று சீரழியும் போது இன்னொன்று வரவே செய்யும் .


புத்த மதம் அருவ வழிபாடு உள்ளது . பரம்பரை பூசாரிகளை ஒழித்தது . யார் பக்குவம் அடைந்து துறவறம் மேற்கொள்கிறானோ அவனே பூசை செய்யமுடியும் .

அந்த புத்த மதமும் அரச மதமாக ஆனவுடன் செல்வம் கொழித்தவுடன் அதை அனுபவிக்க குடும்பத்தில் ஒருவர் சந்நியாசி ஆகி சொத்தை உடன்பிறந்தவர்களுக்கு கடத்தினார்கள் . இலங்கையில் நடப்பதுபோல . அன்பை போதித்த புத்தரின் பேரால் கொடூரங்கள் பல செய்தார்கள் . காரணம் பிழைப்பிற்காக சந்நியாசி ஆனார்களே ஒழிய கொள்கைக்காக அல்ல .


இந்தியாவில் ஏழை இந்து ஒருவன் தன குடும்பத்தை முன்னேற்ற பட்டாளத்தில் சேர்ந்து தன் ஆசாபாசங்களை தியாகம் செய்வான்


ஏழை கிறிஸ்தவனோ பாதிரியாகி அண்ணன் தம்பிகளை பணக்காரனாக்கி வாழவைப்பான் . ரகசியமாக குடி கூத்து வைத்துக்கொள்வான்

விதைக்கிறவன் ஒருவன் அதை அறுக்கிறவர் அநேகர் என்பது நியதி என்றார் சற்குரு இயேசு . காய்த்த மரத்தில் பறவைகள் வந்து கூடி அதை தங்கள் எச்சங்களால் நிரப்பி கொச்சைப்படுத்தும் . இது இயற்கை

அப்போது வேறொன்று வளர்ந்து சீர்திருத்தம் செய்யும் ; இதுவும் நியதி

புத்த மதம் சீரழிந்ததும் சமணம் வந்தது . அது மகா நிர்வாணத்தை போதித்தது

புத்த மதமும் சமண மதமும் ஏறக்குறைய 1500 ஆண்டுகள் இந்தியாவை ஆதிக்கம் செய்தன . இந்து கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு புதர்மண்டிப்போயின . சமண மதத்திலும் அக்கிரமம் பெருத்த போது சைவம் அப்பர் சுவாமிகளால் செழித்தது . அப்போது அவர் செய்த வேலை என்ன ? ஊர் ஊருக்கு போய் அடைத்த கோவிலை திறந்து புதரை செதுக்கும் உழவாரப்பணி செய்தார் இணையாக வைணவமும் வளர்ந்தது .

புத்தருக்கு முந்தய இந்துமதத்தில் பிராமண பூசாரிகள் ஆடுமாடுகளை யாகத்தில் பலி செழித்தி அதனை உண்டார்கள் . இன்றைய பிராமணர்கள் ஆதியில் புலால் உண்டவர்களே .

ஆனால் புத்த சமண மதங்களில் பூசாரிகள் தகுதி உள்ளவர்கள் தூய்மை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்ற நியதி இருந்ததால் குறைந்த பட்சம் புலால் உண்ணாமலாவது தூய்மையாக இருக்கவேண்டும் என்ற நியதியை கொணர்ந்தார்கள்

புத்த சமண மதங்களின் சில மகத்துவங்களை இந்து மதத்திற்குள் இழுத்துக்கொண்டதால் சுவீகரித்துக்கொண்டதால் அந்த மதங்களை இந்துமதத்திற்குள் அடக்க முடிந்தது

எது இப்போது இந்து மதத்திற்கு சவாலாக உள்ளதோ அந்த மதத்தின் மேன்மைகளை இழுத்து கொண்டால் அந்த மதங்கள் இந்து மதத்தில் அடங்கி விடும் .


மற்ற மதங்களை தனக்குள் அடக்கும் தகுதி நெகிழ்வுத்தன்மை இந்து மதத்திற்கு மட்டுமே உண்டு . ஆனால் மற்ற மதங்களால் அது முடியாது . அவைகள் அடுத்த மதங்களை அழிக்க முயலும் . ஆனால் இந்துமதம் ஒன்றால் மட்டுமே அடுத்த மதத்தை தனக்குள் ஜீரனிக்கமுடியும் . இதுவே செய்யப்படவேண்டும் . அதை விடுத்து அந்தாகாசுரனாக இதுமட்டுமே உசத்தி மற்றதை காரிதுப்பு வெறு என்பது வளர்ச்சிக்கு உகந்தது அல்ல .

திருக்கோவிலூரில் சைவத்திலும் வைணவத்திலும் சரி இந்த அந்தாகாசுரனை அழிக்கும் நிகழ்வுகளே சுட்டப்பட்டுள்ளன . அதற்கான சக்தி இங்கு கட்டவிழ்க்கப்பட்டுள்ளது .



அந்தகாசுர வத மூர்த்தியாக சிவன் அந்தகாசுரனை அழிக்கும் காட்சியிலும் மூன்று விசயங்கள் உள்ளன . திரிவிக்ரமனாக மூன்று அடி எடுத்து வைக்கும் பெருமாளும் மூன்று உண்மைகளை விளம்பிக்கொண்டுள்ளார் . அதை மூன்று ஆழ்வார்கள் சாட்சி செய்துகொண்டுள்ளனர்

ஆன்மீக வாழ்வில் வளரும் ஒரு ஆத்மா முழுமையை எட்டும்போது கடைசி தடுக்கல்லாக மூன்று ஆதி சாபங்கள் குறுக்கிடுகின்றன .











அந்த மூன்று சாபங்களிளிருந்து விடுதலையை

சைவத்திலும் சரி வைணவத்திலும் சரி

இந்தத்தலத்தில் பிரார்த்தித்து தியானித்தால்

பெற்றுக்கொள்ளமுடியும்

அவைகளைக்குறித்த வெளிச்சம் கிடைத்தது ;

பிரார்த்தித்திருக்கிறேன் ; இறைவன்

விடுதலையை கட்டவிழ்ப்பார் என்றே

நம்புகிறேன் 




நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி