Total Pageviews

Friday, August 17, 2012

இறைஅனுபூதி !!


----குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள்  ---

பெறற்கறிய மானிடப்பிறவியை பெற்றும் இந்த பிறவியிலேயே இறைஅனுபூதி பெற முயலாதவன் வீனில் பிறந்தவனே !

இறைவனிடம் ஜெபி ! அவருடைய புகழ் பாடு ! சத்சங்கத்தை நாடு ! உலகியலிலும் உலக கடமைகளிலும் இரவுபகலாக மூழ்கியிருக்கின்ற மனதால் இறைவனை சந்திக்க இயலாது ! எனவே இடையிடையே தனிமையை நாடி சென்று இறைவனை சிந்திப்பது மிகவும் இன்றியமையாதது !

உண்மையையும் உண்மையற்றதையும் எப்போதும் விவேகத்தால் ஆராய்ந்து அறிய வேண்டும் . இறைவன் ஒருவரே உண்மை . மற்ற அனைத்தும் உண்மையற்றவை ; அதாவது நிலையற்றவை . இவ்வாறு ஆராய்ந்து , நிலையற்றவற்றை உள்ளத்திலிருந்து உதறித்தள்ள வேண்டும் !

குழந்தையிடம் தாயின் பாசம் , கணவனிடம் மனைவியின் காதல் , பணத்திடம் கருமியின் பற்று ----- இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தது போன்ற அன்பை உன்னால் இறைவனிடம் செலுத்த முடியுமானால் அந்த கணமே இறைவனை காண்பாய் !

பாலிலிருந்து வெண்ணெயைப் பெற வேண்டுமானால் பாலை தனியான இடத்தில் வைத்து அது தயிர் ஆகுமாறு விடவேண்டும் ! ஆட்டவோ அசைக்கவோ செய்தால் அது தயிராக உறையாது . பிறகு வேறு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு , அமைதியான இடத்தில் உட்கார்ந்து , தயிரை கடைய வேண்டும் ; அப்போதுதான் வெண்ணெய் கிடைக்கும் . அதுபோல தனிமையில் இருந்து இறைவனை தியானிப்பதால் ஞானம் , வைராக்கியம் , பக்தி ஆகிய பேறுகள் கிடைக்கின்றன !

வெட்கம் , வெறுப்பு , பயம் --இவை மூன்றும் இருக்கும் வரையில் இறை காட்சி கிடைக்காது !

தராசில் கனமுடைய தட்டு தாழ்கிறது ; லேசான தட்டு மேலே போகிறது . அதுபோல் உலகியல் பளுவை சேர்த்து வைத்திருப்பவன் வாழ்க்கையில் அமிழ்ந்துவிடுகிறான் .அத்தகைய பளு குறைவாக இருப்பவன் இறைவனுடைய பாதாரவிந்தைகளை நோக்கி மேலெழுகிறான் !

தனது உத்தியோகத்தை இழந்து , புதுவேலை தேடி அலுவலகம் அலுவலமாக ஏறி இறங்கி அலைகின்ற மனிதனின் ஆவலும் ஏக்கமும் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு தீவிரமான ஆவலையும் ஏக்கத்தையும் இறைவனிடம் கொள்ள வேண்டும் !

பிள்ளைகள் இல்லையே என்று சிலர் ஆறாக கண்ணீர் பெருக்குகின்றனர் . சொத்து இல்லையே என்று சிலர் அழுகின்றனர் . ஆனால் அந்தோ ! கடவுளை காணவில்லையே என்று ஏங்கி அழுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ? வெகு சிலரே !இறைவனை தேடுபவர்கள் ; அவருக்காக கண்ணீர் வடைப்பவர்கள் உண்மையிலேயே அவரை அடையத்தான் செய்கிறார்கள் !

கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றால் நாம் ஏன் அவரை காண்பதில்லை என்று கேட்கலாம் ? பாசி படிந்து கிடக்கின்ற குளத்தின் கரை மீது நின்று பார்த்தால் அதிலுள்ள தண்ணீரை காண முடியாது . தண்ணீரை காண வேண்டுமானால் பாசியை விலக்க வேண்டும் . அறியாமை திரையால் மூடிய கண்களை வைத்து கொண்டு கடவுளை காண முடியவில்லையே என்று புலம்புகிறாய் . அவரை காண விரும்பினால் முதலில் உன் கண்களிலிருந்து அறியாமைத்திறையை அகற்று . அத்ற்கு தியானம் , ஜபம் ,இவை போற சாதனைகள் வேண்டும் !

தூசு படிந்த கண்ணாடியில் பிம்பம் தெரியாது . அதுபோல் தூய்மையற்ற மனதில் இறைவன் தெரிய மாட்டான் . இறைவனின் திருநாமத்தை உச்சரித்து உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள் . பகவானுடைய புன்னிய நாமத்தை கீர்த்தனம் செய்து உனது நாக்கினை பரிசுத்த படுத்திக்கொள் !

ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் அவற்றை பரிகசிப்பவர்களிடமிருந்து விலகியே இரு !

காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கிறது . அதனால் தான் கடலில் செல்லும் கப்பல் திசை தவறுவதில்லை . உள்ளம் கடவுளை நோக்கியதாக இருக்கும் வரையில் வாழ்க்கை கடலில் மனிதன் வழி தவற மாட்டான் ! 

கொக்கு ஒன்று மீனை பிடிப்பதற்காக மிகுந்த கவனத்துடன் போய் கொண்டிருந்தது . வேடன் ஒருவன் பின்னால் நின்று அதன் மீது அம்பை எய்யத்தயாராக நின்றான் . ஆனால் கொக்கு அதை கவனிக்கவே இல்லை . அதைக்கண்ட மகான் ஒருவர் `` நான் தியானத்திற்கு அமரும் போது உன்னைப்போல இருப்பேனாக . என் பின்னால் யார் இருக்கிறார்கள் , என்ன இருக்கிறது என்று ஒருபோதும் திரும்பிப்பாராதவனாக இருப்பேனாக ! `` என்று கூறினார் !

சிறு இழை ஒன்று நீட்டிக்கொண்டிருந்தாலும் ஊசியின் காது வழியாக நூல் நுழைய முடியாது . உலகப்பொருட்களில் சிறிது பற்று இருந்தாலும் நம்மால் கடவுளை அணுக முடியாது !

பொட்டலம் கிழிந்து கடுகு சிதறிவிட்டால் அவற்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம் ! அதுபோல பல்வேறு திசைகளில் ஓடுகின்ற மனதை உட்குவித்து ஒருமுகப்படுத்துவது எளிதான காரியம் அல்ல . அத்ற்கு சத்சங்கம் ஒரு முக்கிய தேவையாகும் !

புலி மற்ற மிருகங்களை கொல்கிறது . அது போல் பக்தி என்னும் புலி , காமம் , குரோதம் முதலானவற்றை கொன்று விடுகிறது . இதயத்தில் பக்தி வளருமானால் காமமும் ஏனைய மிருக உணர்ச்சிகளும் மறைகின்றன !

வயதின் காரணமாக கிளியின் தொண்டையில் உள்ள சவ்வு தடித்து விடுமானால் அத்ற்கு பேச கற்று கொடுக்க முடியாது . அதுபோல் வயதான பிறகு மனதை இறைவனிடம் செலுத்துவது கடினம் . இளமைப்பருவத்திலேயே இறைவனை நாட வேண்டும் !

மன ஏக்கத்துடன் இறைவனுக்காக உன்னால் அழ முடியுமா ? மனைவி மக்களுக்காகவும் பணத்திற்காகவும் குடம்குடமாக கண்ணீர் சிந்தி அழுகின்றனர் . இறைவனுக்காக யார் அழுகிறார்கள் ? குழந்தை பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தாய் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள் . விளையாட்டில் சலிப்புற்றதும் அது பொம்மைகளை எறிந்துவிட்டு ``அம்மா `` என்று அலறுகிறது . இந்த சத்தம் கேட்பதுதான் தாமதம் , தாய் உடனே சோற்றுப்பானையை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து விட்டு வேகமாக ஓடி வந்து குழந்தையை கைகளில் ஏந்திக்கொள்கிறாள் !

எண்ணமும் செயலும் ஒன்றாக இல்லாமல் , களங்கம் அற்ற நேர்மை இல்லாமல் கடவுளை அறிய முடியாது . கோணல் புத்தி உடையவர்களிடமிருந்து அவர் வெகு தொலைவிலேயே இருக்கிறார் !

பெரிய மீன் பிடிக்க விரும்புபவன் தூண்டிலையும் இரையையும் நீருக்குள் போட்டுவிட்டு மணிக்கணக்காக அமைதியாக காத்திருக்கிறான் . அதேபோல் ஆன்மீக சாதனைகளை பொறுமையாக செய்துகொண்டே இருப்பவன் இறுதியில் கடவுளை நிச்சயமாக கண்டே தீர்வான் !

உலக வாழ்வாகிய கடலில் ஆறு முதலைகள் உள்ளன . காமம் , குரோதம் முதலியனவே அந்த முதலைகள் . ஆனால் நீ உன் உடம்பில் மஞ்சளை பூசிக்கொண்டால் முதலை பயமே உனக்கு வேண்டாம் .விவேகமும் வைராக்கியமுமே அந்த மஞ்சள் !

பூவிலிருந்து காய் வெளிப்பட்டதும் பூவின் இதழ்கள் தானாகவே வீழ்ந்துவிடுகின்றன . அதுபோல் உனது தெய்வீக இயல்பு வெளிப்படும்போது , மனித இயல்பிற்கு இயற்கையான குற்றம்குறைகள் தாமாகவே விலகிவிடுகின்றன !

கடவுளை அடைய விரும்புபவர்களும் ஆன்மீக சாதனைகளில் முன்னேற விரும்புபவர்களும் காமம் , பணத்தாசை ஆகிய இரண்டு வலைகளில் சிக்காமல் இருப்பது மிக முக்கியம் . இல்லாவிடில் அவர்கள் ஒரு நாளும் பூரணத்துவம் பெற மாட்டார்கள் !

யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட குறை காணாதே . பக்தி வேண்டும் என்று பிரார்த்திப்பதை போலவே பிறரை குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்தனை செய் !

நல்லவனாக வேஸம் போடுவது , கணக்குப்பார்ப்பது , தர்க்கம் செய்வது -- இத்தகைய மனதால் கடவுளை அறிய முடியாது . எண்ணமும் செயலும் ஒன்றாக இருப்பவர்களுக்கு இறைவன் வெகு அருகிலேயே உள்ளார் !

கடவுளை நெருங்க நெருங்க அமைதியை உணர்வாய் . அமைதி அமைதி ; நிலத்த அமைதி -- இந்த அனுபவம் ஏற்படும் . கங்கையை நெருங்க நெருங்க அதன் குளிர்ச்சியை உணர்கிறாய் . அதில் இறங்கினாலோ பரிபூரண அமைதி உணர்ச்சியை பெறுவாய் !